Saturday, February 3, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 2



மெல்லிசைப் பாடகர் எஸ்.கே.பரராஜசிங்கம்

எங்கள் திணைக்களத்தில் நடந்த கலைமகள் விழாவில் கர்நாடக கச்சேரி செய்வதற்காக இரண்டு சகோதரர்கள் வந்தார்கள். மூத்தவர் டாக்டர் எஸ்.கே.மகேஸ்வரன், இளையவர் எஸ்.கே.பரராஜசிங்கம் என்று அறிவிப்பு செய்தார்கள். இனிமையாகப் பாடியதோடு, எங்களோடெல்லாம் மிகுந்த அன்பாக நடந்து கொண்டார்கள்.

எங்களுக்கு மிகவும் பிடித்த மெல்லிசைப்பாடல்களான "சந்தன மேடை என் இதயத்திலே",
"அழகான ஒரு சோடி கண்கள்" போன்றவற்றை பாடியவர் என்பதோடு, எஸ்.கே.பரராஜசிங்கம் (பரா அண்ணை) அவர்களுடைய இனிய சுபாவம், அவரை எனது ஆதர்சத்துக்கு உரியவராக்கியது.

("சந்தன மேடை எம் இதயத்திலே" பாடலுக்கு இசையமைத்ததோடு பராவுடன் இணைந்து பாடியவர் - பிரான்ஸ், பாரிஸ் நகரில் வாழ்ந்த, காலஞ்சென்ற எம். ஏ.குலசீலநாதன்.
பாடலை இயற்றியவர்- பராவின் நெருங்கிய உறவினரும், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை தலைவரான பேராசிரியர் என். சண்முகலிங்கன்)


எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள் இந்திய திரை இசைப்பாடல்களின் ஆரம்பகாலத்தைப்பற்றி நிறையச் சொல்லுவார். ஒரு திரைப்படத்தில் (தியாகராஜ பாகவதர் நடித்த முதல்படமான "பவளக்கொடி" -1934) 50க்கு மேற்பட்ட பாடல்கள்(ஆமாம்...நம்புங்கள்) இடம்பெற்றதிலிருந்து தொடங்கி, அப்பாடல்கள் அமைந்த கர்நாடக ராகங்களை சொல்லி, பாடிக்காட்டுவார். தியாகராஜ பாகவதர், ஹொன்னப்ப பாகவதர், தண்டபாணி தேசிகர், பாபனாசம் சிவன் போன்றோரை எல்லாம் எனக்கு பரிச்சியமாக்கினார். கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிபெற்று ஈடுபாடு கொண்டவராக இருந்த போதிலும், இசையில் பரீட்சார்த்தம் செய்யப்படுவதை அவர் விரும்பினார். பிரபல கர்நாடகஇசைப் பாடகர் மகாராஜபுரம் சந்தானம் அவர்களும், மெல்லிசை மன்னர் எம.எஸ் விஸவநாதன் அவர்களும் இணைந்து வழங்கிய இசைவடிவத்தைப்பற்றி மிகவும் சிலாகித்துக்கூறி, அதன் நுணுக்கங்களை எனக்கு உணரத்தியிருக்கிறார்.


பரராஜசிங்கம் அவர்களை எங்கள் நாட்டு மெல்லிசையின் பிதாமகர் என்று அழைப்பார்கள். காவலூர் ராசதுரை அவர்களின் தயாரிப்பில் ஒரு வர்த்தகசேவை நிகழ்ச்சியொன்றில்தான் மெல்லிசைப்பாடல்கள் ஆரம்பத்தில் ஒலிபரப்பாகி வந்தன. ஆனால் இவை வானொலியில் ஒலித்து, காற்றோடு கலந்து போயின. வானொலியை விட்டால் இதன் ஒலிப்பதிவுகள் யாரிடமும் இருக்கவில்லை. காலப்போக்கில், மாறிவரும் சூழ்நிலையில் வானொலி நிலையத்தில் இருந்துகூட அவை காணாமல் போய்விடலாம் என்றும் எனக்கு தெரிந்திருந்தது. சில்லையூரர் எழுதிய "தணியாத தாகம்" ஒலிப்பதிவு நாடாக்கள் தொலைந்து போகவில்லையா ?


இந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து, தெரிந்தவர்கள் "இந்த பாடல் பதிவு பெற்றுத்தரமுடியுமா.." "அந்தப் பாடல் வேண்டும்" என்று தாங்கள் விரும்புகின்ற பாடல் பட்டியல்களை அனுப்பத் தொடங்கினார்கள். அப்படி பாடல்களை வானொலி நிலையத்தில் இருந்து அனுமதி பெற்றோ, பெறாமலோ வெளியே எடுப்பது சாத்தியமாக இருக்கவில்லை. எனவே "உங்கள் மெல்லிசைப்பாடல்களை ஒரு தொகுப்பாக வெளியிட்டால் என்ன" என்று பரராஜசிங்கம் அவர்களை நச்சரிக்கத் தொடங்கினேன்.

இதன் நடைமுறைச்சிக்கலை நினைத்தோ என்னவோ அவர் நீண்ட நாட்களாக ஒத்திப்போட்டு வந்து, கடைசியில் சம்மதித்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு அதற்கான தொகை செலுத்தி பாடல்களைப் பெற்றுக் கொண்டோம். சில பாடல்களில் பின்னணியில் ஒலிக்கும் இரைச்சலை நீக்க முயன்றால் பாடல் வரிகளே சேதப்பட்டுவிடும் என்பதினால் அவற்றை அப்படியே விட்டோம். சற்று இசை சேர்த்து மெருகு படுத்தினால் பழமைச்சிறப்பு இல்லாமற் போய்விடும் என்பதினால் அந்த யோசனையும் கை விடப்பட்டது.


இடையில் எனக்கு வந்த சோதனைகளையும் தாண்டி, நண்பர் அப்துல் ஹமீட்டின் துணையுடன் நான் கோலாகமாக, கொள்ளுப்பிட்டி சசகாவா மண்டபத்தில் "ஒலி ஓவியம்" ஒலிநாடாவை வெளியிட்டு வைத்தேன். அணை கட்டிய அணிலின் கதைதான்.






கனடாவில் அருவி வெளியீட்டகம் இந்த மெல்லிசைப்பாடல்களை அவருடைய அனுமதியுடன் இறுவட்டாக "குளிரும் நிலவு" என்ற பெயரில் வெளியிட்டார்கள். தனது பாடல்கள் இறுவட்டாக வெளிவரும்போது பரா அண்ணை காலமாகி விட்டார்.

இன்று உலகளாவிய ரீதியில் அவரது பாடல்களை ஏராளமானோர் கேட்பதற்கு நானும் ஒரு வகையில் காரணமானதையிட்டு பெருத்த மகிழ்ச்சியடைகிறேன்.

1 comment:

  1. அழகான ஒருசோடிகண்கள்,சந்தனமேடையின் இதயத்திலே,ஞாயிறெ
    னவந்தாள் எனப்பல மெல்லிசைபாடல்களை பாடி புகழ்பெற்றவர்.பரா
    ஈழத்துமெல்லிசையின் பிதாமகர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    வதிரி.சி.ரவீந்திரன்.

    ReplyDelete