Saturday, February 10, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 6


குச்சுப்புடி நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன்

ஆடற்கலையென்றவுடன எங்களில் பலர் பரதநாட்டியத்தை மட்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அதனோடு எங்களுக்கு பரிச்சியம் அதிகம் அதனால்தான்.

குச்சுப்புடி, கதகளி, மோகினியாட்டம் என்றெல்லாம் நிகழ்த்தப்படும் ஆடல்வகைகளை பயிலவும், அரங்கேற்றவும், ரசிக்கவும் எங்களுக்கு பொதுவாக சந்தர்ப்பம் கிடைப்பதி;லை.

ஆனால் யாழ்மாவட்டத்தில் வல்வை மண்ணில் பிறந்த ஒரு நாட்டியக்கலைஞர், பரதத்தோடு இம்மூன்று ஆடல்வகைகளையும் இந்தியாவில் சிறந்தகுருமாரிடம் கற்றுத்தேர்ந்து, இலங்கை திரும்பியபின் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முக்கியமாக தெய்வீக அழகும் பக்திபாவமும் பொருந்திய அவரது குச்சுப்புடி நடனநிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது.

அவர்தான் ரங்கா விவேகானந்தன்..

தனது எட்டாவது வயதில் தனது முதலாவது குரு காலஞ்சென்ற கீதாஞ்சலி கே.நல்லையா அவர்களிடம் பரதம் பயின்று அரங்கேறிய ரங்கா, பின்னர் தென்னிந்தியா சென்று பரதத்தின் நுணுக்கங்களை குரு மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடமும், கதகளி நாட்டியக்கலையை குரு கோபிநாத் அவர்களிடமும், மோகினி ஆட்டம் என்ற ஆடற்கலையை குரு கலாமண்டலம் நடனம் கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் பயின்று, தனது சிறப்புக்கலையான குச்சுப்புடி நடனத்தை குச்சுப்புடி கலைக்கழக நிறுவனரான குரு வேம்பட்டி சின்ன சத்தியம் அவர்களிடம் உயர்நிலைமாணவியாக தேர்ந்து, 'நாட்டிய விசாரத்' என்ற டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.


தென்னிந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் குச்சிலாபுரம் என்ற கிராமத்தில் உருவாகியதாகக் கூறப்படும், இந்த ஆடற்கலை ஆரம்பத்தில் பிராமண ஆடவர்களாலேயே நிகழ்த்தப்பட்டதாம். சித்தேந்திர யோகி என்பவர் இதை செழுமைப்படுத்தி, பெண்கள் ஆடும்வண்ணம் அமைத்து பிரபல்யப்படுத்தினார் என்கிறார்கள். நாட்டியநாடகம் போன்ற அமைப்பில் பக்தி சார்ந்த கதைகள் சொல்லும் இந்த நாட்டியவடிவம், ஆடுபவரின் திறனால், வேறுபட்ட உணர்வுக்கோர்வைகளை பார்ப்பவர் மனதில் எளிதாக உருவாக்கும் எழில்மிகு கலையாகும்.

தனது குச்சுப்புடி நாட்டியக்குருவான வேம்பட்டி சின்னசத்யம் அவர்களுடன், இந்தியாவெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி ஊடகங்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற ரங்கா, தொடர்ந்து விசேட அழைப்புக்களின் பேரில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, சுவீட்சலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலகப்பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலர் முன்னிலையில் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

தொழில்ரீதியான மேற்கத்திய 'பாலே' நடனக்கலைஞர்கள் உள்ளிட்ட வேறுபட்ட நாட்டியக்கலைஞர்களுக்காக சிறப்புப் பயிற்சிப்பட்டறைகள் நடாத்தவும் ரங்கா அழைக்கப்பட்டிருக்கிறார்.

இத்தாலியில் ஸ்போலெற்றோ என்ற நகரில்; நடைபெற்ற 'இரண்டு உலகங்களின் நாட்டியவிழா', ஜெர்மனியில் பொன் நகரிலும், இத்தாலியில் அங்கோனா நகரிலும், குறோசியா நாட்டிலும் நடைபெற்ற சர்வதேச நாட்டியவிழாக்களில் இந்திய நடனக்கலையை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாட ரங்காவை அழைத்திருந்தார்கள்.

பின்னாளில் இவ்வாறு உலகப்பிரசித்திபெற்ற இந்தக்கலைஞரின் ஆரம்பகாலத்தில் வழங்கிய ஒரு குச்சுப்புடி நாட்டிய நிகழ்ச்சியில் நானும் சம்பந்தப்பட்டது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

ரங்கா அப்போதுதான் இந்தியாவில் படித்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார். அவரது தந்தையாரான விவேகானந்தனும், எனது பெரியதந்தையாரான பொன்னையாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் கிராமமான கரவெட்டிகிழக்கில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ரங்காவின் குச்சுப்புடி நடன நிகழ்வொன்றை நடாத்துவதற்கு சம்மதித்தார்கள்.

இருபது வயதிற்கு அண்மித்த எனது இளமைக்காலத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளனாக அமையும் வாய்ப்பை பெரியப்பா எனக்கு தந்தார். எனக்கு மிகுந்த சந்தோசம்.

ரங்காவின் குச்சுப்புடி நடனத்திற்கான பாடல்கள் யாவையும் தென்னிந்தியாவிலிருந்தே பதிவுசெய்து கொண்டு வந்திருந்தார்கள்;. எல்லாமே தெலுங்குப்பாடல்கள். ஆனால் அவற்றுக்கான விளக்கத்தை தமிழில் வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு நடனத்தின் முன்னதாக, அந்த விளக்கங்களை சுவைபட சொல்லிவைத்தேன். கலைஞனாக வரவேண்டுமென்ற ஆசை துளிர்விட்டுக்கொண்டிருந்த காலம். எனவே சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு விளக்கங்களை நாடகபாணியில் ஆனால் மிகையில்லாமல் வழங்கியதாக ஞாபகம்.

அத்தோடு ரங்கா கொழும்பிலும், கண்டியிலும் நடாத்திய இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு என்னை 'நிகழ்ச்சித்தொகுப்பாளனாக' அழைத்து சந்தோசப்படுத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ரங்காவின் மிகச்சிறந்ததோர் நடனநிகழ்வை அண்மையில் நின்று பார்க்கவும், அதில் சிறிதளவேனும் என்பங்கும் இருக்க நேர்ந்ததும் சந்தோசமான நினைவுகளாயின.

இசையைப்போலவே, நடனத்திற்கும் பூகோள எல்லைகளோ, இனங்களின் பிரிவுகளோ தடையாகவிருப்பதில்லை என்பார்கள். இந்தக் கலைவடிவங்களைப் பொறுத்தவரையில் அனேகமான சுவர்களெல்லாம் இடிந்து போய்விடுகின்றன. கலை பலரையும், பல இனங்களையும், பல நாடுகளையும் இணைத்து ஒன்றாக்கும் சக்தி வாய்ந்தது.

இந்த கருத்தின் அடிப்படையில் ரங்கா விவேகானந்தன் தொடரந்தும் தன் கலைப்பணியில் இயங்கிக்கொண்டிருக்கிறார். அதுவும் கீழைத்தேய கலையின் பரிச்சியமே இல்லாத தென் அமெரிக்காவின் ஆர்ஜென்ரீனா நாட்டில் வாழ்ந்து கொண்டு 'ஆனந்தராஜம்' என்ற பெயரில் இந்த நாட்டின் முதலாவது இந்திய நாட்டிய, இசைப்பள்ளியை நிறுவி நடத்திவருகிறார்.

ஸ்பானியமொழி பேசும் சிறுமிகளும், இளம்பெண்களும், தென்னிந்தியபாணி நடன ஆடையலங்காரங்களுடன், குச்சுப்புடி நடனங்களை இவரது நெறியாள்கையில் பயின்று அரங்கேறி வருகிறார்கள். மொழிபுரியாவிடினும், இசையினாலும், ஆடற்கலையின் அழகினாலும் கவரப்பட்ட அந்நாட்டுப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு புதிய கலைவடிவத்தில் பயிற்சிபெற ரங்காவின் 'ஆனந்தராஜம்' நடனப்பள்ளிக்கு மகிழ்வுடன் அனுப்பிவருகிறார்கள்.

கனடா, இலங்கை, அவுஸ்திரெலியா, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அவரிடம் பயின்று அரங்கேறியவர்கள் அந்த பாரம்பரியத்தை தொடர்ந்தும் பரப்பிவருகிறார்கள். இவர்களோடு ஆர்ஜென்ரீனா நாட்டிலிருந்து சில்வியா றிஸ்ஸி, லியோனாரா பொனெற்றோ, நேற்றாலியா சல்காடோ என்ற பெயர்களும் வெகுசீக்கிரத்தில் இணைந்து கொள்ளப்போகின்றன.

'மிகுந்த அழகுடன் காந்தம் போல பார்ப்போரைக் கவரும் நாட்டிய பாணி இவருடையது' என்று லண்டன் ரைம்ஸ் நாளேடு இவருடைய நாட்டிய நிகழ்ச்சி பற்றி கூறியிருக்கிறது.

இப்படி எண்ணிலடங்கா பாராட்டுக்களை உலகெங்கிலிருந்தும் தனதாக்கிக்கொண்ட நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் எங்கள் மண்ணுக்கு சொந்தமானவர் என்று நாங்கள் நிச்சயமாப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இறுதியாக ஒரு தகவல், நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் அடியொற்றி பாக்குநீரிணையை நீந்திக்கடந்து, வேறு பலசாதனைகளை நிறுவி, ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் இறப்பைத்தழுவிக்கொண்ட 'ஆழிக்குமரன்' ஆனந்தன், ரங்காவின் (ரங்கமணியின்) உடன்பிறந்த சகோதரனாவார்.

No comments:

Post a Comment