Monday, February 5, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 4



கவிஞர் மஹாகவி



மஹாகவியை நான் ஆரம்பத்தில் பரிச்சியம் பண்ணிக் கொண்டது அவரது கவிதை நாடகங்கள் மூலமாகத்தான். லும்பினி அரங்கிலும், பொரளை வை.எம்.பி.ஏ அரங்கிலும் இயக்குனர் தாசிசியஸ் அவர்களின் இயக்கத்தில் மேடையேறிய, "கோடை", "புதியதோர் வீடு" ஆகிய பாநாடகங்கள் தான் அவை.

கோடையில் இருந்து பாவரிகள் -

"நின்றந்தக் கோயில் நிமிர்ந்து நெடுந்தூரம் பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும்
வேர்த்துக் கலைஞர் விளைத்தமணிமண்டபமும் வீதிகளும் நூறு விளக்கும் பரதத்தின்
சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறுபாதம் ஆடும் அரங்கும் அறிந்து சுவைஞர்கள் நாடிப் புகுந்து
நயந்திட நீ சோமனுடன் ஊதும் குழலில் உயிர்பெற்றுடல் புளகித்து ஆதி அறையில் அமரும்
கடவுளுமாய் என்றோ ஒருநாள் எழும்பும், இருந்துபார்"


புதியதோர் வீடு பாநாடகத்தில் இருந்து -

வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்
வெறிகொண்ட புயல்நின்று கரகங்கள் ஆடும்
நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும்
நிலையான தரைநீரில் இலைபோல் ஈடாடும்
சிறுநண்டு கடல்மீது படமொன்று கீறும்
சிலவேளை இதை வந்து கடல்
கொண்டுபோகும்


இதுபோல நாடகம் முழுவதும் பேச்சோசையில் கவிதை வரிகள் வரும். பா நாடகம் என்றால் அது எனக்கு அன்னியமானதாக இருக்கும் என்ற என் நினைப்பு தவறு என்று புரிந்து கொண்டேன். நாடகம் எனக்கு நன்றாக பிடித்து விட்டது.

எனக்கு ஒரு ந்ண்பன் இருந்தான். இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவி வகித்த சிங்காரவேல் என்ற அந்த ந்ண்பன் பின்னர் விபத்தொன்றில் மரணித்து விட்டான். அவன் மஹாகவி மீது மிகுந்த பற்று வைத்திருந்ததோடு, அவருடைய நாடகங்களில் சிறு பாத்திரங்களிலும் விருப்பத்துடன் நடிப்பவன். அவரைப் பற்றி அடிக்கடி சொல்லியும், அவரது நூல்களை படிக்கத்தந்தும் என்னையும் அவரையும் இணைக்கும் பாலமாக செயற்பட்டான்.

இவ்வாறு மேற்சொன்ன பாநாடகங்கள் மூலமும், அவரது "குறும்பா" முதலான நூற்கள் மூலமும் மஹாகவி மீது மானசீகமான அபிமானத்தை வளர்த்துக் கொண்டேன், மட்டக்களப்பில் மஹாகவி ஒரு நிர்வாக அதிகர்ரியாக இருந்தபொழுது, அவரே முன்னின்று நடத்திய 'அண்ணாவியார் மகாநாட்டில்" கலை நிகழ்ச்சி செய்ய போயிருந்த வேளையில் தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும், எங்கள் ஒவ்வொருவரினதும் வசதிகள் குறித்து அக்கறையாக விசாரித்து ஆவன செய்த அந்த "சாதாரண மனிதரின்" உயர்ந்த பண்பும், இரக்கமும் அவரது கவிதைகள் கூறுவது போலவே இருந்ததில் எனக்கு ஆச்சர்யம் இருக்கவில்லை.

1971ல் அரசகரும மொழித் திணைக்களத்தில், உதவி ஆணையாளராகப் பதவி பெற்று கொழும்புக்கு வந்தார். அப்போது இலங்கை வானொலியில் "கலைக்கோலம்" நிகழ்ச்சியை த்யாரித்து வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். "கலைக்கோலம்" என்பது நாடகம், நடனம், திரைப்படம், படைப்பிலக்கியங்கள் சம்பந்தமான விமர்சக ரீதியிலான ஒரு வாராந்த சஞ்சிகை நிகழ்ச்சி. தற்செயலாக அவரை வானொலி நிலையத்தில் சந்தித்தபோது, என்னையும் அந்நிகழ்ச்சிக்கு எதாவது பங்களிப்பு செய்யச்சொன்னார்.

ஏற்கெனவே காவலூர் இராசதுரை என்ற பிரபல ஒலிபரப்பாளர் "கலைக்கோலம்" நிகழ்ச்சியை நடத்திய காலத்தில் மிக அரிதாக பங்குபற்றியிருந்தேன் என்றாலும், என் புலமை, ஆளுமை பற்றிய சுயமதிப்பீட்டை அவருக்குச் சொன்னேன். ஆனால் அவர் எனக்கு உற்சாகமூட்டி, "விமர்சகரின் பார்வையில் இல்லாவிடினும் ஒரு ரசிகனாக உங்கள் எண்ணங்களை சொன்னால் போதும்" என்று சொல்லி, கவிஞர் மு. பொன்னம்பலத்தின் "அது" என்ற கவிதைத்தொகுதியை என்னிடம் தந்தார்.

மு. பொன்னம்பலத்தின் கவிதைக்கோலங்களை ரசிகனாய் தரிசித்தேன்.
" அந்தி அடிவான், அமுதக் கடைசலென
குந்தி யெழும்நிலவு, பூவரசங் குழையூடாய்
சிந்திக் கிரணங்கள் செல்லம் பொழிகின்ற
காலைப் பரிதி, ககனச் சிறுபறவை,
"ஏலோ" எனநீர் இறைப்போர்- இவையெனது
பிஞ்சு மனதைப் பிசைய, மறுகணமே
பெஞ்சில் எடுத்தெச்சில் பெய்து சுவரெல்லாம்
நெஞ்சில் புரண்ட நினைவுக்குத் தொட்டிலிட.....
என்ன விதமாய் இளமை மறைகிறது"


அவரது கவிதைகள் என் நெஞ்சில் உருவாக்கிய உணர்வுக்குவியலை எழுத்தில் வடித்துக்கொண்டு, ஒலிபரப்புக்கு முன் காட்டி அங்கீகாரம் பெறுவதற்காக மகாகவியின் வீட்டிற்கு விரைந்தேன்.(அவர் அப்போது கொழும்பில் பாமன்கடையில் இருந்தார்).

நான் அப்படி விரைந்ததுக்கு என் கருத்தாக்கம் வானொலியில் ஒலிபரப்படும் சந்தோசம் தவிர்ந்த இன்னமொரு புறக்காரணியும் இருந்தது. அதற்காகக் கிடைக்ககூடிய சன்மானம் (15 ருபா) மாதக்கடைசியில் வருமானம் குறைந்த ஒரு எழுதுவினைஞனான எனக்கு மிகப்பெரிதாகப் பட்டது.

மகாகவி வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ வெறிச்சோடிய சூழல். அருகில் வசிப்பவர்களிடம் கேட்டேன். அவர் இருதய நோயுற்று, கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. துணுக்குற்ற நான் அங்கிருந்தே பஸ் எடுத்து கொழும்பு பெரியாஸ்பத்திரிக்குப் போனேன். அவரது நிலை பாரதூரமானதாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆனால் அந்தவாரம் நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்படாமல் போய் விட்டால்..

மனம் அங்கலாய்த்தது. வள்ளல் சீதக்காதியை கடைசியாக காணவந்த தமிழ் புலவரை ஒருமுறை நினைத்துக்கொள்ளுங்கள்.

ஆஸ்பத்திரியில் பார்வையாளர்கள் வந்து போய்விட்ட நிலையில், கணகளை மூடிப் படுத்திருந்த மகாகவியின் முன்னால் போய், கையில் எழுத்துப்பிரதியுடன் வியர்க்க, விறுவிறுக்க நின்றேன். கண் விழித்து பார்த்தவர், " எழுதி விட்டீரா.. யோசிக்காதையும்.. நான் சுகமாகி வந்தவுடனே நிகழ்ச்சி செய்வோம்" என்று சொல்லி, பிரதியை வாங்கி "இருக்கட்டும்..வாசித்துப் பார்க்கிறேன்" என்று தலையணைக்கு கீழ் வைத்துக்கொண்டு விடை கொடுத்தார்.

அதுதான் அவர் என்னோடு பேசிய கடைசி வார்த்தைகளாகப் போயின. அந்த "அசாதாரண் மனிதரின் சரித்திரம்" நிறைவுற்றது.

கடைசி,கடைசியாக மழை தூறிய ஒரு பொழுதில், மருதானயில் டீன்ஸ் றோட்டில் உள்ள ஒரு மலர்ச்சாலையில், அவரது உடல் யாழ்ப்பாணம் கொண்டு போவதற்காக பெட்டியில் வைத்து மூடப்படுவதை, சற்று ஒதுங்கியே நின்று கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு நின்றவர்களுடன் நான் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. யாரையுமே எனக்கு தெரியாது. அவரைத் தவிர.

"நீண்டு கிடந்தபடி
நீ துயின்ற பெட்டியினை
வண்டியிலே ஏற்றுதற்கு
நானும் இரு கைகொடுத்தேன்

கை கொடுத்து விட்டுக்
கருந்தார்ப் பெருந்தெருவைப்
பார்த்தபடி நின்றேன்
நான் பார்த்தபடி நின்றேன் காண்..."


- மகாகவியின் மரணம் குறித்து அவரது நெருங்கிய நண்பர் எம். ஏ. நுஹ்மான் எழுதிய கவிதை வரிகள்.

3 comments:

  1. அன்பான யாழ் வானம்பாடி, உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. நன்றி

    ReplyDelete
  2. "நீண்டு கிடந்தபடி
    நீ துயின்ற பெட்டியினை
    வண்டியிலே ஏற்றுதற்கு
    நானும் இரு கைகொடுத்தேன்

    கை கொடுத்து விட்டுக்
    கருந்தார்ப் பெருந்தெருவைப்
    பார்த்தபடி நின்றேன்
    நான் பார்த்தபடி நின்றேன் காண்..."

    - மகாகவியின் மரணம் குறித்து அவரது நெருங்கிய நண்பர் எம். ஏ. நுஹ்மான் எழுதிய கவிதை வரிகள்.

    ReplyDelete